பின்னர் அவை கூடியதும் பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தை தவிர்ப்பது, ஜனநாயகத்தின் குரல்வலையை நெரிக்கும் முயற்சி என்று விமர்சித்தார். இதற்கு பதிலளித்த பிரகலாத் ஜோஷி, அரசிடம் கேள்வி கேட்க ஏராளமான வழிகள் இருப்பதாகவும், மத்திய அரசு விவாதத்திற்கு அஞ்சவில்லை என்றும் தெரிவித்தார்.
அவையில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு, தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் கிராமப்புற மாணவர்கள் 12 பேர் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டார். நாடு முழுவதும் 4 மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் மூலம் கொரோனா பரவல் தீவிரமடைவதை வெற்றிகரமாக தடுக்க முடிந்ததாகத் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார். இதே காலகட்டத்தில் நாட்டில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தியதால் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், 2020 – 21ஆம் நிதியாண்டுக்கான துணை மானியக் கோரிக்கையின் முதல் தொகுதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், 2 லட்சத்து 35 ஆயிரத்து 852 கோடியே 87 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை கோரினார்.
படிக்க…நீட் தேர்வில் 90 சதவீத மாணவர்கள் பங்கேற்பு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
மாலை 3 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்றுக் கொண்டனர். திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என். ஆர். இளங்கோ தமிழில் உறுதி மொழி ஏற்றனர்.
தொடர்ந்து குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மாநிலங்களவை கூடியதும் துணைத்தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஸ் சிங்கை தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்மொழிந்தார்.
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் ஹரிவன்ஸ் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி வில்சன், மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்திய – சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவுள்ளார். கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து, கடந்த வாரம் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க…ஊரடங்கு காலத்தில் 1.04 கோடி பேர் சொந்த மாநிலம் திரும்பினர்; உயிரிழந்தோர் விவரங்கள் இல்லை – மத்திய அரசு பதில்
அப்போது, இரு நாட்டு வீரர்களும் போதிய இடைவெளியை கடைப்பிடிப்பது, பதற்றத்தை தணிப்பது உள்ளிட்ட 5 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்நிலையில் லடாக் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதையடுத்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் இன்று மதியம் 3 மணிக்கு விளக்கம் அளிக்கவுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.