வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்துள்ள அத்தியூர் ஊராட்சியிலிருக்கின்ற குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல் மலை, பள்ளகொல்லை ஆகிய மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் மலையிலுள்ள செல்லியம்மன் மற்றும் தஞ்சியம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். திருவிழாவை நடத்துவதற்கு முன்பு சில வினோதமான சடங்குகளையும் அவர்கள் செய்கிறார்கள். அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் திருவிழாவை நடத்தி முடித்த பின்பு, அடுத்த ஓராண்டுக்குள் மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உள்ளூரிலோ, வெளியூரிலோ இறந்துபோயிருந்தால், அடுத்த திருவிழாவை நடத்துவதற்கு முன்பு இறந்தவர்களின் ஆவியை அவரவர் வீட்டுக்கு அழைத்துவரும் சடங்குகளை ஊர்கூடி நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த சடங்குகளை முடித்த பின்புதான் திருவிழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமாம். அதன்படி, இந்த ஆண்டு திருவிழாவை நடத்துவதற்கான முடிவுகளை எடுப்பதற்காக கடந்த 21-ம் தேதி கோயில் அருகே திரண்டு பொங்கல் வைத்து மலை கிராம மக்கள் வழிபட்டனர். தொடர்ந்து, அன்றிரவே குறிகேட்டு மறுநாள் மாலை பெண்கள் கும்மியடித்தும், சாமி வந்து ஆடியபடியும் இறந்தவர்களின் ஆவியை கூவிக் கூவி வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வினோத நிகழ்ச்சியை நடத்தினர்.