இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சாலைகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியிருக்கிறார். அதற்கு முன்பு, கொழும்பில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.பி அமரகீர்த்தி அத்துகொரலா தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், மக்கள் சிலர் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியானது. எம்.பி மரணம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த வன்முறையில் எம்.பி அமரகீர்த்தி அத்துகொரலா உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டது குறித்தும், 300 பேர் காயமடைந்தது குறித்தும் விசாரணை நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். அதையடுத்து, போலீஸ் தரப்பில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், எம்.பி அமரகீர்த்தி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவர் போராட்டக்காரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இலங்கை போலீஸார் தற்போது தகவல் தெரிவித்திருக்கின்றனர்.