பார்பிதா (Barbhitha) தொகுதி காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக், (Abdul Khaleque), “காவல் நிலையம் மீதான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் ஆதாரிக்கவில்லை. ஆனால், தாக்குதல் நடத்தியவர்களின் வீடுகளை போலீஸார் புல்டோசர் கொண்டு இடித்தது மனித உரிமைகளை நேரடியாக மீறுவதாகும்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகாரை தொடர்ந்து இப்போது அஸ்ஸாமிலும் பாஜக புல்டோசர் பிரசாரம் தொடங்கியுள்ளதா என்கிற கேள்வியினை முன் வைக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, “மாஃபியாக்கள், குற்றவாளிகளுக்குச் சொந்தமான இடங்களில் நமது புல்டோசர்கள் நடவடிக்கை எடுக்கும்” என்று அதிரடியாகப் பேசினார். அப்போது தொடங்கியது புல்டோசர் பிரசாரம். இது 2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலிலும் அது எதிரொலித்தது.
உத்தரப்பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் வீட்டின் முன்பாக புல்டோசர்களை நிறுத்திவைத்தது காவல்துறை. “குற்றவாளிகளுக்குக் காலக்கெடு விதித்திருக்கிறோம். அதற்குள் சரணடையாவிட்டால், அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளை இடித்துத் தள்ளிவிடுவோம்’’ என்று அவர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த 50-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சரணடைந்தார்கள். அதன் பிறகும் சரணடைய மறுப்பவர்களின் சொத்துகள் தரைமட்டமாக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.
இதே போல் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேசத்திலும் புல்டோசர் பிரசாரத்தைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்தின் பா.ஜ.க முதல்வரான சிவ்ராஜ் சிங் செளகான், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட சிலரின் சொத்துகளை புல்டோசர் மூலம் இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிவ்ராஜ் சிங்கின் ஆதரவாளர்கள், அவரை `புல்டோசர் மாமா’ என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினார்கள்.