சரண்யாவை அண்ணன் சக்திவேல், கும்பகோணத்தில் உள்ள அடகு கடைக்கு அழைத்து சென்று நகையை மீட்டு வீட்டிற்கு வந்திருக்கின்றனர். மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வீட்டில் சரண்யாவின் அப்பா சேகர், அம்மா தேன்மொழி, சக்திவேல் அவர் மனைவி ஆகியோர் இருந்திருக்கின்றனர். பிற்பகல் 3 மணியளவில் சரண்யாவும் மோகனும் ஊருக்கு செல்ல வீட்டைவிட்டு வெளியே வர, வீட்டின் கதவை வெளிப்புறம் தாழ்ப்பால் போட்டிருக்கிறார் சக்திவேல். வீட்டிற்குள் அவரது தந்தையும் தாயாரும் கதவைத் திற என்று கூச்சலிட, சக்திவேல் சரண்யாவை பார்த்து, `நீங்கள் இருவரும் எப்படி இந்த ஊரைவிட்டு போகிறீர்கள்’ என்று பார்ப்போம் என்று கூறிக்கொண்டே செல்போனில் ரஞ்சித்திடம் பேச, அடுத்த ஒரு நிமிடத்தில் ரஞ்சித் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
ரஞ்சித்தும், சக்திவேலும் மோகனை அரிவாளால் வெட்ட சம்பவ இடத்திலேயே இறந்து போனார் மோகன். தப்பித்து ஓட முயற்சித்த சரண்யாவை விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர். எங்கள் குழுவினரிடம் பேசிய சதிஸ் மற்றும் சரவணன், ‘இதனால்தான் ரஞ்சித் வேண்டாம் என்றோம். தங்கை திருமணத்திற்கு நாங்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவள் நல்ல வாழக்கையைத்தான் தேர்தெடுத்துக்கொண்டாள். எங்கள் அண்ணன் சக்திவேலை ரஞ்சித்துதான் மனதை மாற்றி இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளனர்’ என்று கூறினார்கள்.
சரண்யாவின் தந்தை சேகர், ‘என் மகள் எங்கள் மீது அதிக பாசம் வைத்திருப்பவள். அவளால்தான் மனைவி குணமாகி இருந்தார். சேர்க்கை சரியில்லாதவனோடு எப்படி வாழ முடியும். அதனால் தான் வேண்டாம் என்றோம்’ என்று கூறினார்கள். மோகனின் உறவினர் பாலஅருண், ரவிகோபால் ஆகிய இருவரும் எமது குழுவினரிடம், ‘மோகன் தன் வாழ்நாள் முழுவதும் தன் அம்மாவுக்காவே வாழ்ந்திருக்கிறான். மிகவும் அமைதியானவன். இந்த குடும்பத்தில் தற்போது யாரும் இல்லை என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது’ என்று கூறினார்கள். என்று கள விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.