ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் அக்னிபத் என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. நான்கு ஆண்டுகள் முடிந்ததும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களில், 75 சதவிகிதம் பேர் பாதுகாப்பு படையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு அறிவித்துள்ள இந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்கள் முழுவதும் பெரும் போராட்டமும் கலவரங்களும் வெடித்து வருகின்றன. இதன் காரணமாக பல இடங்களில் ரயில்களுக்கு தீவைப்பு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. வட இந்தியாவில் நடந்த இந்த போராட்டம் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் வரையிலும் பரவியுள்ளது.
சென்னையில், போர் நினைவு சின்னம் அருகே 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிற மாநிலங்களில் நிகழ்ந்தது போல் தமிழகத்திலும் ரயில் நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சென்னை ரயில் நிலையங்கள் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் யாரும் உள்ளே நுழைய வண்ணம் ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ராஜு ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல், எக்போர் ரயில் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இவ்விரு ரயில் நிலையங்களிலும் தலா 150 பேர் என 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக, சென்னையில் உள்ள பிற ரயில் நிலையங்களில் தலா 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.