இதுகுறித்துச் செல்வபெருமாளிடம் பேசினோம். “சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட சிறப்புமிக்க இந்தக் குளம் தூர்வாரும் போது சுடுமண்ணால் அமைக்கப்பட்ட எட்டு உறைகிணறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. கூடுதலாக, கிணறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கும்பகோணம் மகாமகக் குளம், ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தகிணறு போன்றவற்றின் அமைப்பைப் போன்றே இந்தக் குளத்திற்குள் இருக்கும் உறைகிணறுகள் அமைந்துள்ளன. அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் உறை கிணறுகளைப் பார்வையிட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்துத் தொல்லியல் ஆய்வாளர் மணிமாறன் என்பவர், “நீர் நிலைக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்துச் சோழர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அதே போல் குளம், ஆறு போன்றவற்றில் உறைகிணறுகள் அமைக்கும் மரபும் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட குளத்தில் எட்டுச் சுடுமண் உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வைக்கோல் மற்றும் கருக்காய் போன்றவற்றை வைத்துக் களிமண்ணைப் பூசிக் கல் செய்வதையும் சோழர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர். அந்தச் சுடுமண் கல்லின் நடுப்பகுதி கறுப்பாகவும், வெளி மற்றும் உட்பகுதி சிவப்பாக இருக்கும். தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள உறை கிணறுகளின் சுடுமண்ணும் அந்த அமைப்பில் இருப்பதால் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட உறை கிணறு என்பதை அறிய முடிகிறது. மேலும் இந்தக் குளத்தை அகழாய்வு செய்தால் பழைமையான சிற்பங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார்.