தருமபுரி மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம், அங்குள்ள டி.என்.சி விஜய் மஹாலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டம் தருமபுரிதான். எப்படியாவது, இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்ற ஒரு சபதத்தை நானாகவே எடுத்திருக்கின்றேன். மேற்கில் காவிரி, வடக்கில் தென்பெண்ணை என 2 பெரிய ஆறுகள் ஓடிகொண்டிருக்கின்றன. ஆனால், இந்த மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. இப்போது, ‘திராவிட மாடல்’ என்று ஒரு புதிய கொள்கை திடீரென வந்திருக்கிறது.
10 வயது, 11 வயது, 12 வயது பெண் பிள்ளைகள் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு கையில் மதுபாட்டில்களை வைத்துகொண்டு குடிப்பதுதான் திராவிட மாடலாக தெரிகிறது. எங்களிடம் ஆட்சியைக் கொடுங்கள். ‘பாட்டாளி மாடல்’ ஆட்சியைக் காட்டுகிறோம். பாட்டாளி மாடல் என்பது தமிழ்நாட்டில் ஒரு சொட்டு சாராயம் இருக்காது. அனைத்து மது கடைகளையும் மூடிவிடுவோம். தரமான இலவச கல்வியை கொடுப்போம். விவசாயிகளே விளைச்சலுக்கு விலை நிர்ணயம் செய்வதுதான் பாட்டாளி மாடல். உண்மையான வளர்ச்சி மாடலை என்னால் கொடுக்க முடியும். திராவிட மாடலுக்கும், பாட்டாளி மாடலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.