இதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவீந்திரன், உதவிப் பொறியாளர் கம்பன் ஆகியோரிடமிருந்து அலுவலகத்தில் வைத்து கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உறையூரில் உள்ள ரவீந்திரனின் வீடு, திருவெறும்பூரில் உள்ள கம்பனின் வீடு ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று இரவு 10 மணி வரை சோதனை நடத்தினர். அதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவீந்திரன் வீட்டிலிருந்து 6 லட்ச ரூபாய் ரொக்கம், 50 பவுன் தங்க நகைகள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வங்கி முதலீடு பரிவர்த்தனை ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதையடுத்து ரவீந்திரன், கம்பன் ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக விவரமறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “மாவட்டத்தில் ஏ கிரேடு அதிகாரியாக இருக்கக்கூடிய தொழில் மைய மேலாளர் ரவீந்திரன், தன்னுடைய அலுவலகத்தில் டேபிளில் வைத்தே பயமில்லாமல் லஞ்சம் வாங்கி வந்திருக்கிறார். சிறு நிறுவனங்களில் ஆரம்பித்து பெரு நிறுவனங்கள்வரை பலரிடமும் கடன் உதவி பெற்றுத் தருவதற்காகவும், மானியம் வழங்குவதற்கும் திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் வரை லஞ்சம் வாங்கியிருக்கிறார். அப்படி கிடைத்த பணத்தை வைத்து திருச்சி உறையூரில் ஒரு பிளாட், கிராப்பட்டி பகுதியில் ஒரு பிளாட் ஆகியவற்றை வாங்கியிருக்கிறார். மேலும், ஏராளமாக சொத்துகளையும் வாங்கிக் குவித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. உதவிப் பொறியாளர் கம்பன்தான் ரவீந்திரனுக்கு லஞ்சம் வாங்கிக் கொடுப்பதில் இடைத்தரகர் போல செயல்பட்டு வந்திருக்கிறார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம்” என்றனர்.