புதுச்சேரி காலாப்பட்டில் அமைந்திருக்கும் மத்திய சிறைச்சாலையில் விசாரணை மற்றும் தண்டனை பெற்ற சிறைவாசிகள் சுமார் 300 பேர் இருக்கிறார்கள். அவர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்கும், தண்டனைக் காலம் முடிந்து வெளியே செல்லும்போது சுயதொழில் செய்து குடும்பத்தை நடத்து வதற்கும் பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்து வருகிறது புதுச்சேரி யூனியன் பிரதேச சிறைத்துறை. அந்த வகையில் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த ‘ஶ்ரீ அரபிந்தோ சொசைட்டி’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் குறைந்தபட்ச தண்டனை பெற்றவர்களுக்கும், ஆயுள் தண்டனை பெற்றுப் பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் சிறைவாசிகளுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியை அளித்து வருகிறது சிறைத்துறை. அதற்காகச் சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றிப் புதர்மண்டிக் கிடந்த அந்த இடத்தை இரண்டே வாரத்தில் சீரமைத்து, மண்ணை உழுது, பாத்திகள் பிரித்து, தெளிப்பு நீர்ப் பாசனம் அமைத்து அசத்தியிருக்கிறார்கள் சிறைவாசிகள். அதே வேகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 60 வகைப் பழச் செடிகள், 50 வகை மூலிகைச் செடிகளையும் நட்டு இயற்கை விவசாயத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அதுகுறித்து 25.04.2022 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் சிறைவாசிகளின் அனுபவங்களுடன் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் கடந்த வாரம் நம்மை தொடர்புகொண்ட சிறைத்துறை உயரதிகாரிகள், “எங்கள் சிறைவாசிகள் பாரம்பர்ய விவசாயத்தில் அறுவடையை துவக்கிவிட்டார்கள்.
அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். வர முடியுமா?” என்று கேட்க, உடனே வருகிறோம் என்று கூறிவிட்டு மறுநாள் காலையிலேயே சிறையில் ஆஜரானோம். அவர்களின் அனுபவத்தை ’ஜெயிலுக்குள் விவசாயம்; அசத்தும் கைதிகள் | Part 2 என்ற தலைப்பில் பசுமை விகடன் பக்கத்தில் வீடியோ செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
அந்த வீடியோவில் ”தாங்கள் உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் அதற்காக அரசு சிறை வளாகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் நிலத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்றும் சிறைக்குள் விளையும் காய்கறி, பழங்கள் போன்றவை சிறை உணவுக்காக பயன்படுத்தப்பட்டது போக மீதியை உழவர் சந்தையில் விற்பனை செய்ய வேண்டும்” என்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் சிறைவாசிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளின் விவசாய பண்ணையை பார்வையிட சென்றார் ஆளுநர் தமிழிசை. பாரம்பர்ய விவசாய பண்ணையை பார்வையிட்ட அவர், சிறைவாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சிறைத்துறை அதிகாரிகள் மிகவும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். சிறையிலுள்ள விவசாய பண்ணையை பார்த்து சிறைவாசிகளை உற்சாகப்படுத்தவே இங்கு வந்தேன். விவசாய விளை பொருட்களைப் பார்க்கும்போது எனக்கே உற்சாகமாக இருக்கிறது. இங்கிருக்கும் சிறைவாசிகள் குறை இல்லாத நிறை மனிதர்களாக மாறி வருகிறார்கள். அனைத்து விதத்திலும் அரசு அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும். அதேபோல அவர்களுக்கு உதவியாக இருக்கும் ஸ்ரீஅரபிந்தோ சொசைட்டிக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன். ஊக்கப்படுத்தும் அதிகாரிகளுக்கும், ஊக்கத்தை பெற்றுக்கொண்டிருக்கும் சிறைவாசிகளுக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
மேலும், தாங்கள் உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் அதற்காக நிலம் தாருங்கள் என்றும் சிறைவாசிகள் வைத்த கோரிக்கை பரிசீலிக்கப்படும். அதேபோல இங்கு விளையும் காய்கறி, பழங்கள் போன்றவை சிறை உணவுக்காக பயன்படுத்தப்பட்டது போக மீதியை உழவர் சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையும் விரைவில் பரிசீலிக்கப்படும்” என்றவரிடம், தண்டனை காலம் முடிந்து சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கைதிகள் விடுதலை குறித்து மனிதாபிமானத்துடனும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் காரைக்கால் சிறையை கட்டி முடிப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகும் அதுவரை காரைக்காலை சேர்ந்த சிறைவாசிகள் புதுச்சேரி சிறையில் பாதுகாப்பாக இருப்பார்கள்” என்றும் தெரிவித்தார்.