ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டம், சதூரா தாலுகா அலுவலகத்தில் ராகுல் பட் என்பவர் வருவாய்த்துறை ஊழியராக பணியாற்றி வந்தார். 2010-11-ம் ஆண்டில் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு தொகுப்பின் கீழ் அவருக்கு (கிளார்க்) எழுத்தர் வேலை கிடைத்தது. இந்த நிலையில், ராகுல் பட் நேற்றைய தினம் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டாா். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்த புகாரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு, ‘காஷ்மீர் டைகர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.
இந்த நிலையில், காஷ்மீர் பண்டிட் சமூக மக்கள் குறிவைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கூறி, ஜம்மு-காஷ்மீரில் உள்ள புத்காம் பகுதியில் நடந்த போராட்டத்தில், வன்முறை வெடித்ததால், போலீஸார் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.