‘பொன்னியின் செல்வன்’ என்ற புதினம் உண்மையில் தமிழ் வாசகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்கொண்டது. பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அருண்மொழி என்னும் ராஜராஜ சோழனின் வழியே தொடங்க எண்ணிய இந்தப் புதினம், வந்தியத்தேவனைக் கதாநாயகனாக்கி பெருங்காவியமாக மலர்ந்ததை நீங்கள் படித்தும் உணர்ந்தும் மகிழ்ந்திருப்பீர்கள்.
பொன்னியின் செல்வனில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவங்கள் வீராணம் ஏரி தொடங்கி காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோயில், கடம்பூர் மாளிகை, திருப்புறம்பியம், பழையாறை, தஞ்சை, கோடியக்கரை என்று விரிகின்றன. இந்த இடங்களில் உலாவிய கதாபாத்திரங்கள் யாவும் இன்றுவரை நம்மை வியப்பிலாழ்த்தும். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் யாவையும் அதன் சுவை குறையாமல், வாசகர்களுக்கு அளிக்கும் ஒரு முயற்சிதான் இந்த ‘வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம்’ என்ற வரலாற்று யாத்திரை.
3 பகல், 2 இரவுகள் என நடக்கவிருக்கும் இந்தப் பயணத்தில் மண் மணக்கும் கலை நிகழ்வுகள், சரித்திர ஆன்றோர்களின் வழிகாட்டல்கள், பரம்பர்யமிக்க கலை அழகுகொண்ட தங்கும் விடுதிகள், அறுசுவை உணவு வசதி என அனைத்து அம்சங்களோடும் திகழும் சரித்திர யாத்திரை இது.
வீராணம் ஏரி: தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைக்கு மேற்கே இரண்டு காத தூரத்தில் உள்ளது வீரநாராயண ஏரி. இது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும், கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் கொண்டது என்கிறது ‘பொன்னியின் செல்வன்’ புதினம். இதுவே இந்நாளில் ‘வீராணம் ஏரி’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் உண்டாக்கிய மாபெரும் கடல் போன்ற ஏரி இது! இதன் அழகையும் வரலாற்றையும் அதன் கரையில் இருந்தே ரசிப்போம் வாருங்கள்.
கடம்பூர்: சம்புவரையர்களின் மாளிகை அமைந்திருந்த இடம். கதையின் முக்கிய சம்பவங்கள் இடம்பெற்ற களம். அப்பர் ஸ்வாமிகள் பாடிய அழகிய கரக்கோயில் இது. சிற்பங்களுக்கும் கல்வெட்டுகளுக்கும் பெயர்போனது.
பழையாறை: அரிசிலாற்றுக்குத் தென் கரையில் உள்ள அழகிய தலைநகரம். இன்று இடிந்து மண்மேடாகி, சிறுகிராமமாக உள்ளது. இங்குதான் ராஜராஜ சோழர் வணங்கிய கைலாசநாதர் கோயில் உள்ளது. அவரின் பள்ளிப்படை என்று நம்பப்படும் இடமும் உள்ளது. மேலும் பாண்டிமாதேவி பிறந்த, அவரின் திருவுருவச் சிலை உள்ள சோமநாதேஸ்வரர் கோயில், நந்திபுர விண்ணகரம், பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை உள்ளிட்ட பல இடங்கள் நாம் காணத் தயாராக உள்ளன.
திருப்புறம்பியம்: சோழர்களின் வரலாற்றில் திருப்புமுனை உண்டாக்கிய இடம் திருப்புறம்பியம். மண்ணியாற்றுக்கு வடகரையில், திருப்புறம்பியம் என்னும் ஊரில் வயல்வெளிகளுக்கு நடுவே கேட்பாரற்றுக் கிடக்கிறது ஒரு பள்ளிப்படைக் கோயில். இது ஒரு மாபெரும் போரில் உயிர் நீத்த கங்க மன்னன் பிரிதிவீபதியின் ஞாபகமாக எடுத்தது. விஜயாலயச் சோழன் இங்கு காட்டிய வீரத்தால் சோழர் குலமே மீண்டெழுந்த அதிசயம் இங்குதான் நடைபெற்றது.
கோடியக்கரை: அழகிய கடற்கரை கிராமம் இது. பொன்னியின் செல்வனின் முக்கியப் பாத்திரமான பூங்குழலியை நினைவுகூரும் ஊர் இது. இங்குள்ள குழகர்கோயிலிலும் கதைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இன்னும் தஞ்சையும், கோடியக்கரையும் ஆயிரம் ஆயிரம் கதைகளைச் சொல்ல உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
இரவு எங்கெங்கு தங்கப் போகிறோம்?
ஆகஸ்டு 12 (வெள்ளி) – பேருந்துப் பயணம், வீராணம், காட்டுமன்னார் கோவில், கடம்பூர் கோயில்கள்
இரவு தங்கல் – லக்ஷ்மி விலாஸ் காட்டேஜ் (காட்டுமன்னார்கோவில் அருகே)
ஆகஸ்டு 13 (சனி) – பழையாறை கோயில்கள், திருப்புறம்பியம்
இரவு தங்கல் – இண்டிகோ (சுவாமி மலை அருகில்)
ஆகஸ்டு 14 (ஞாயிறு) – தஞ்சை, கோடியக்கரை
இரவு சென்னை திரும்பல்…
ஆகஸ்ட் 15 – அதிகாலை 5 மணிக்கு சென்னை அடைதல்.
குறிப்பு: நேரம் பொறுத்து பார்க்கும் இடங்களும் சற்றே மாறலாம்.
நபர் ஒருவருக்கு சிறப்பு சலுகைக் கட்டணம் ரூபாய் 18,000 (ஜி.எஸ்.டி. உள்பட).
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடங்களை நேரில் காண வேண்டுமா?
விகடன் நடத்தும் வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்…
முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404