இதனை முன்னிட்டு கடந்த 4 -ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. 8 கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, நேற்று காலை மஹா பூர்ணாகுதியுடன் தீபாராதனை செய்யப்பட்டது. யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தக் கடங்கள் தருமபுர ஆதீனம் 27 -ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கருவறை கோபுரங்கள், ராஜகோபுரம், அம்பாள், முருகன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளின் கோபுரங்கள், பரிவார தெய்வங்களின் சந்நிதி கோபுரங்கள் ஆகியவற்றின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றிக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன 27 -வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன 24 -வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ, அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள், செங்கோல் ஆதீன மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாசார்ய சுவாமிகள், மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.