`நான் பறந்துகொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் கனவுடன்
நான் வளர்ந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களைச் செயல்படுத்த
நான் வளர்ந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் வளர்ந்தேன் என்னால் முடியும் என்ற
நம்பிக்கையுடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன், வாழ்வில் பறந்துகொண்டேயிருப்பேன்.’
அப்துல் கலாம், அந்த மாணவனைப் பார்த்தார். அவன் முகத்தில் ஒரு தெளிவு, பூரிப்பு. `சார், எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. நான் நிச்சயம் கப்பல் இன்ஜினீயர் ஆவேன்’ என்று சொல்லிவிட்டு தான் அமர்ந்திருந்த இடத்துக்குப் போனான்.
மிக மிகச் சாதாரணமான எளிய வரிகள்தான். ஆனால், நம்பிக்கை ஏற்படுத்தும் வரிகள். ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டிருக்கும் `வளர்ந்த பாரதத்தில் வாழ்வோம்’ என்கிற நூலில் இந்தச் சம்பவம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்துல் கலாம் ஆற்றிய சில முக்கியமான உரைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் சுவாமி விமூர்த்தானந்தர். நம்பிக்கை என்பது ஒரு சாவி. அது நமக்குக் கிடைத்துவிட்டால் எந்த சிக்கலான பூட்டையும் எளிதாகத் திறந்துவிடலாம். நம்பிக்கையைக்கூடச் சிலரால்தான் அழகாக ஊட்ட முடியும். அந்த அரிய காரியத்தை அழகாகச் செய்தவர் கலாம்!