கீர்த்தி சுரேஷுக்கு படத்தின் ஆரம்பத்தில் மட்டும் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படி காட்சிகள் வைத்திருக்கிறார்கள். ‘கப் அப்புறம் கொடு, இப்ப கம்பெனி கொடு’ என்னும் டோனிலேயே கீர்த்தி சுரேஷை இன்டர்வெல்லுக்குப் பின்னால் டீல் செய்கிறார் மகேஷ் பாபு.
மகேஷ் பாபுவுக்கு காலை யார் மீதாவது போட்டுக்கொண்டு தூங்கினால்தான் தூக்கம் வரும் என்பதால், கீர்த்தி சுரேஷை அந்தத் திருப்பணிக்கு அழைக்கிறார். கீர்த்தி சுரேஷின் மாமாவான சுப்புராஜும் பிளாக்மெயில் காரணமாக இதற்கு உதவுகிறார். தினசரி இரவு 8 மணி ஆனதும் சுப்புராஜு, கீர்த்தியை மகேஷ் பாபு வீட்டில் விட்டுவிட்டு, காலையில் கூட்டிவந்துவிடுவார். இடையே இரண்டு நாள்கள் மகேஷ் பாபு கூப்பிடாமல் விட, கீர்த்தி சுரேஷே ஏன் இன்னும் கூப்பிடவில்லை என சுப்புராஜுவுக்கு போன் செய்து அழைத்துப் போகச் சொல்கிறார். அதாவது அவருக்கு மகேஷ் பாபு மீது காதல் வந்துவிட்டதாம்.
இப்படியாக நீளும் இரண்டாம் பாதியில் இது எந்த வகை Stockholm Syndrome என யோசித்துக்கொண்டே இருந்ததால் க்ளைமேக்ஸ் வந்து நம்மை காப்பாற்றுகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த க்ரிஞ்சு குடோன்களை எல்லாம் காமெடி என நினைத்து சினிமா படைப்பாளிகள் செய்துகொண்டிருப்பார்கள் எனத் தெரியவில்லை. அக்கட தேசமே, கொஞ்சமாவது நெருடல் இல்லாமல் படம் பார்க்கவிடுங்கள்.
இவர்கள் போக வெண்ணிலா கிஷோர், நதியா, தணிகல பரணி ஆகியோருக்கு முக்கியமான வேடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ‘கலாவதி’ பாடல் ஆடியோ வெர்சனே வெறித்தன ஹிட் என்பதால் படத்திலும் அட்டகாசமாக இருக்கிறது. கிருஷ்ணா, ஜோனிதா காந்தி குரல்களில் வரும் ‘மா மா மகேஷா’ ரகளையான குத்துப் பாடல். பின்னணி இசையிலும் தமன் பக்கா.