பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நாளை வெளியாகவிருக்கிறது ஸ்பைடர்மேன் படத்தின் அடுத்த பாகம் Spider-Man: No Way Home. டாம் ஹாலண்ட், பெனடிக்ட் கம்பர்பேட்ச், ஜெண்டயாவுடன் கடந்த இருபது ஆண்டுகளில் வெளியான பல ஸ்பைடர்மேன் படங்களின் வில்லன்களும் இதில் வரிசைகட்டி களமிறங்குகிறார்கள். ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ திரைப்படத்துக்குப் பிறகு அதிக டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டிருப்பது இந்த ஸ்பைடர்மேன் படத்துக்குத்தான். சென்னையில் காலை ஐந்து மணியிலிருந்தே பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்டு தொங்குகின்றன. அப்படி இந்தப் படத்தில் என்ன ஸ்பெஷல்?
பீட்டர் பார்க்கர் யார் என்னும் கேள்விக்கான விடை எல்லோருக்கும் தெரிந்துவிட, அதிலிருத்து மீள டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் உதவியை நாடுகிறார் ஸ்பைடர்மேன். ஆனால், ஏதோ கோளாறில் எல்லா உலகங்களிலிருந்தும் ஸ்பைடர்மேன் வில்லன்கள் பீட்டர் பார்க்கரின் உலகுக்குள் வந்துவிடுகிறார்கள். யாரையும் கொல்லாத பீட்டர் பார்க்கர், எப்படி இந்த புதிய வில்லன்களை சமாளிக்கிறார் என்பதுதான் கதை. பழைய வில்லன்கள் வருகிறார்கள் என்றால், நம் பழைய ஹீரோக்கள்? ஆம், அங்கு தான் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.