மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் இம்மாத இறுதியில், பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Also read : என் உயிருக்கு ஆபத்து… பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க உள்ளேன் – மதுரை ஆதீனம்
பட்டின பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பல தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயிரரை கொடுத்தாவது தருமபுரம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதினம் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். தருமபுரம் பட்டின பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். முதலமைச்சர் இதில் நல்ல முடிவை விரைவில் எடுப்பார். ஆதீனத்துடன் பேசி இரு சுமூகமான முடிவை அரசு எடுக்கும் என்று விளக்கமளித்தார்.
இதனிடையே, தருமபுரம் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்துள்ளது தமிழக நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு எதிரானது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பாஜக இந்ந நிகழ்ச்சியை நடத்தி காட்ட தயாராக இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
During elections TN Govt goes all the way out to please Hindus. Pics of family members in temples,striking a pose for poojas n havans surface. Once won,they work against the tradition of Hindus. Interference by TN Govt in “Pattina Pravesam” is unnecessary n against hindu beliefs.
— KhushbuSundar (@khushsundar) May 4, 2022
இந்நிலையில், பட்டின பிரவேசம் நிகழ்ச்சியில் தமிழக அரசு தலையிடுவது இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தேர்தல் நேரத்தில் தமிழக அரசு இந்துக்களை மகிழ்விக்க அனைத்து செய்களிலும் ஈடுபடுகிறது. குடும்ப உறுப்பினர்கள் கோவில்களில் பூஜைகளில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வலம் வருகிறது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இந்துக்களின் பாரம்பரியத்திற்கு எதிராக அவர்கள் செயல்படுகின்றனர். பட்டின பிரவேசம் நிகழ்ச்சியில் தமிழக அரசு தலையிடுவது இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.